Sunday, February 27, 2005

இ.எ.எ.எ.

இன்றிரவுவரை எழுத எண்ணாத எழுத்துக்குப்பை


குடையாத ஓடமாய் தண்டுகள் வலித்தது எறும்பு. பாதி உடம்பு அமிழ்ந்து மீதி விளிம்பால் வெளியே தெரிய, ஒரு திசையில் என்று இல்லாமல், ஒரு பாதி கோளநீர்த்துளியில் தன் வயிற்றை மையமாக்கிச் சுழன்றது. அதன் சுழற்சிக்கு, அதற்கு குறித்த திசையில் வெளிப்படுதற்குத் தேவையான ஒருங்கிய சிந்தனை இல்லாதது காரணமா, இல்லை, தன் வெப்பநிலையை இழந்து கொண்டிருக்கும் தேனீர்க் கோப்பையிலிருந்து சூடாகிக் கொட்டிய நீரின் மேற்பரப்பிழுவிசையா காரணம் என்று தேவையில்லாமல் எண்ணிக் கொண்டிருக்க மூளைக்கு ஓய்வாக இருந்தது. உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்ததா இல்லையா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், வழக்கத்தில் யாரும் திட்டவட்டமாய் எனது முடிவு இதுவாக அல்லது அதுவாக இருப்பதற்கு என்னென்ன ஆதார காரணங்கள் என்று கேட்காத விடயங்களில் எனக்கு ஒரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் பிறப்பது உண்டென்று அறிவேன்.

எறும்பு நிலைக்குத்துப்பார்வையிற் பார்க்கும்போது, இப்போதுதான் அரிச்சுவடி படிக்கத் தொடங்கிய சின்னக்குழந்தை மயிர் சிரைந்து பிசிறிய தூரிகையினால், ஒரு வட்டத்துக்குள் போட்ட சிவப்பு எட்டு ஒன்று; அதன் அசைவிற்குப் புதிதாக என்ன உவமை சொல்லலாம் என்று யோசிக்க, தலைக்குள் காலையிலிருந்து அமுக்கியிருந்த வேலைப்பளுவும் மேலதிகாரியிடம் வாங்கிய ஏச்சும் கொஞ்சம் தங்கள் கையைக்காலை நீட்டித் தமது உடல் சரித்துக் குட்டித்தூக்க வயப்பட்டிருக்க வேண்டும்... ஓர் இலேசான உணர்வு... முதல் மிடறு தேநீரினை உறுஞ்சமுன்னர், இந்த உவமேய நிர்வாணத்துக்கு, எல்லோருக்கும் புரிகிறதோ இல்லையோ, புதிதென்று தெரிகின்ற மாதிரிக்கு ஓர் உவமைச்சட்டை மாட்ட வேண்டும் என்று பட்டது; சீனியும் பாலும் தேயிலையும் என் நாக்கின் சுவைநரம்புகளின் அன்றைய திமிர்த்தனத்துக்கேற்ற விகிதத்தில் சுடுநீரோடு கலத்தலுக்கும் என் மேலதிகாரியின் மனக்கோலங்களுக்கும் ஏதேனும் வளைகோட்டாலேனும் வளைத்துப் போடக்கூடிய கணிதத்தொடர்பு இருக்குமா என்று இன்றும் யோசித்தால், எறும்பு மறந்து போகும்... அர்ச்சுனனுக்குக் கிளி மட்டுமே படும், கிளை மறைந்து கிடக்கும். சுவையற்ற தேநீரின் முதல் மிடறு, அடுத்தடுத்த மிடறுகளைவிட எரிச்சல் மிக்கவை என அறிவேன். உடலிலோ உள்ளத்திலோ எரிச்சல்களும் நமைச்சல்களும் தோன்றக்கூடிய உவமைகளின் உவமேயங்களுக்கான பொருத்தல்களில் இடைவெளிகளை அதிகரிக்கக்கூடியவை. கிட்டத்தட்ட, எட்டு வயதுப் பையனுக்கு வாங்கிய முழங்காலுக்குக் கீழே தொங்கும், அல்லது, தொடை பிரிந்து விதை, குறி தள்ளிக்காட்டும் அரைக்காற்சட்டைபோல. எறும்பின் அசைவு, குழந்தையின் எழுத்தைக் கற்றுக்குட்டி வலைப்புலமமைப்பாளன் ஒருவன், நேரப்பரிமாணத்தே இடை-வெளி விட்டு, கார்ட்டீஸியன் அச்சிலே திசை சுற்றி உயிரோட்டம் பண்ணி ..... சலிப்புத் தட்டத்தொடங்கியது சிந்தனை. நினைவோட்டங்களுக்கு இருட்டு முடுக்குகளும் வாயிலற்ற போக்குக் காட்டும் குகைச்சுவர்ப்பாறைகளும் உண்டு.

இந்த எறும்பு தேநீரைச் சுவைக்குமா? "ஆவீன, அகமுடையாள்..." என்றதுபோல் விவேகசிந்தாமணிப்பாடலில் வருகின்றவன், ஒரு சொட்டும் துளித் தேன், புலியோ முதலையோ தன்னைத் தின்னமுன், வாயில் விட்டுச் சுவைக்கவே விழைவான் என்பது கதை மட்டும்தானா... அடிக்கடி "ஆவீன.." என்ற பாடலினை உதாரணத்துக்கு நான் எண்ணிக்கொள்வதாகப்பட்டது. இதுவரை தெரிந்ததோடு மட்டும் சுருங்கிப் போனேனா நான்? எறும்பு நீரின் வெப்பத்தாலும் தத்தளிக்கலாம் என்று பட்டது. தீக்கோழி நெருப்புத்துண்டுகளைத் தின்னும் என்று சின்ன வயதில் யாரோ சொல்லியிருந்தார்கள். இன்றைக்கும் என் பிள்ளை "அ·து உண்மையா? தீக்கோழி தின்னுமா?" என்று கேட்டால், பதில் சொல்ல நிச்சயம் நான் தத்தளிப்பேன். இதுவரை அ·து இயற்கையில் உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ளாமல் எறும்பு தத்தளிப்பதை வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்குகின்றேன் என்று ஒரு வெட்கம் சூழ, நான் நெஞ்ச மையப்பகுதி பற்றி அளவிற் சுருங்கி எறும்பிலும் கொஞ்சமே பெரிதாகத் தெரிவதை அறிந்து கொண்டேன். இந்தநிலையில் என் மேலதிகாரியோ அல்லது சக ஊழியரோ..... முக்கியமாக என் மனைவியோ, குழந்தையோ.... அதை விடவும் இந்த எறும்போ கண்டு விடக்கூடாதே என்று பதை பதைத்து மேசையைப் பிடிக்க முயன்றேன். கை எட்டவில்லை; தேநீர் இன்னும் கொஞ்சம் கையிலிருந்து தளும்பி மேசையிலும் சற்று நேரம்முன் எடுத்திருந்த அடிக்குறிப்புகளிலும் சிதறியது. சமநிலைக்காய்த் தடுமாறினேன். கால்கள் நிலத்தே நிலை படவில்லை.

எறும்பு என்னைக் கண்டிருக்கமுடியாது; நான் ஊரில் ஒருமுறை தீர்த்தக்கேணியில் மூழ்கிப் போயிருக்கின்றேன். எறும்பிற்குத் தெரியாது அந்தக் கணங்களின் என் துன்பமும் உயிர் வாழ வேண்டும் என்ற போராடும் மனப்பாங்கும். சீனி பால் கலந்த தேநீரின் அடர்த்தியிலும்விட, தனி நன்னீர்க்கேணிநீரின் அடர்த்தி குறைவு. அடர்த்தி குறைந்தவற்றில் மூழ்காமற் தப்புதலே கடினம். அதைப் பலமுறை பல வடிவங்களில் உணர்ந்திருக்கின்றேன்.

துளித்தண்ணீருக்குச் சலவித்தை பண்ண இயலற்ற சிற்றெறும்புக்குக் கேணிநீர் பற்றித் தெரிந்திருக்கமுடியாது; "தீக்கோழி நெருப்புத்துண்டு தின்னுமா?" என்று தெரிந்திருக்காதது ஒன்றும் பெரிய அறிவீனம் இல்லை என்று எறும்புக்குப் புரிய வைக்கமுடியாது என்பதை எண்ணிய போது வந்த நமுட்டுச்சிரிப்பை எறும்பு காணாதவண்ணம் மற்றப்புறம் திரும்பிச் சிரித்து வைத்தேன். எறும்பு எத்துணை அறிவிலியாய் இருப்பினும், அதை அதற்கு முன்னுக்கே முகத்திலடித்தாற்போலச் சொல்லுவதுபோல சிரித்து வைப்பது ஒரு நல்ல, மென்மையான மனிதன் தான் என்று எண்ணிக்கொண்டு இருப்பவனுக்கு அழகற்றது என்று இன்றைக்கும் நினைப்பவன் நான். புரிந்தும் புரியா மனிதர்களிடம் பச்சாதாபம் காட்டுகையில் எறும்பிடம் காட்டுவதில் எனது மனிதநிலை பண்பிலே உயர்ந்து அதியுயர்மனிதனாவேன் கணப்போதில் என்று என் வாழ்வின் எந்தக்காலகட்டத்திற் தோன்றியது என்று தெரியாத கும்ட்டு நம்பிக்கை. ஆசியஜோதி படித்தபோதா.... மீண்டும், எறும்பு, மரக்கிளையிலும் விடக் கீழிறங்கி அடி மரமாகி, ஆண்டு வளையங்களும் கண் பட்டன.

தீர்த்தக்கேணியின் மத்தியில் நீர் சுரப்பதற்காக ஆழமான கிணறு ஒன்று கட்டாயம் இருக்கும் என்று நான் அந்த வயதில் யோசிக்காதது என் மூடத்தன்மையைக் காட்டாது என்று நான் வாதாட முடியும் என்று கருதுகின்றேன். இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக என் மூழ்கிப் போனதையும் அலறி அடித்துக் கைகளை அபயம் கேட்டு எம்பி எம்பி மூன்றாம் முறை எம்பியபோதே யாரோ ஒரு நண்பன் என்னைக் காப்பாற்றியதையும் நீச்சல் தெரியாமல் குதித்த அறிவின்மையையும் ஒத்துக் கொள்ளும் என் மனப்பாங்கு எனக்கு என்னைப் பற்றிய ஓர் உன்னத பெருமிதத்தைத் தர, என்னால் உயர்ந்து மேசையைப்ம் நிலத்தையும் தாராளமாக-முன்னைக்கு விட மேலாகவும்- தொடமுடிந்தது. நெஞ்சுக்கும் காற்குதிக்குமிடையே இடைவெளி மீளப்பெருத்ததை உணர்ந்தேன். இடம்போதாமை அறியப்பட்டு அறிவிக்கப்பட்டது என் மனத்துமூலைகட்குள். அம்மா, "நீச்சல் தெரியாமற் குதித்தது அறிவின்மையில்லை, அவசரத்தனம்" என்று சொன்னாலும், அ·து அறிவின்மைதான் என்று நான் ஒத்துக்கொள்கின்றேன். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு..... மீள மீளப்பயன்படுத்திய உவமா.... ஆனால், தண்ணீரிலிருந்து தரையிற் தூக்கிப் போட்ட என்னிடம், ஒரு நண்பன், தான் நான் முதல்முறை கிணற்றுள் மூழ்கும்போது, இயலுமானவரை கால்கைகளை அடிக்காமல் இருக்க முயற்சிக்கச் சொல்லிக் கத்தியதாகவும் அவன் சொன்னபடி நான் செய்திருந்தால், இரண்டாம்முறை மூழ்க முன்னரே தானோ வேறு யாருமோ வந்து தலைமயிரினைப் பற்றி இழுத்தெடுத்திருக்க வசதி கூடியிருக்கும் என்றும் சொன்னான். அவன் சொன்னதை நான் மறுத்து ஏதும் பேசவில்லை; என்னைக் காப்பாற்ற முயன்றவர்களில் அவனும் ஒருவன்; ஆனால், உண்மையில், நான் மூழ்கும்போது அவன் கத்தியது கேட்கவில்லை; அம்மா அழுவார் என்பதுவோ அல்லது வேறேதோ அகவளை வயப்பட்டோ புறச்சலனத்துக்கு, புலன் செத்திருந்தேன். இழுத்துப்போட்ட படிக்கரையிலே புரைக்கேறி வெளிக் கக்கிய நீருடனேயே புறச்சூழல் புலனேறியது.

எறும்பு என் கணநேர அவமானத்தினைக் கண்டிருக்கமுடியாது என்று பட்டது; குறிப்பாக, நான் குறுகிப்போனதைக் கண்டாற்கூட, என் மனம் எழுப்பிய அவமான அலைகளின் மீடிறனையும் வீச்சத்தையும் அறிந்திருந்தாற்கூட, என் கண்களை, தன்னைக் கொண்டிருக்கும் குறுகிய உடலைத் தானே கண்ட என் கூசிய கண்களை அது கண்டிருக்கமுடியாது என்பது நிச்சயமானது. அதன் தாயெறும்பு பின்னர் அழக்கூடுமோ அல்லது அவாப்பட்டு அடிபிடிபட்டு மழைக்குச் சேர்த்துவைத்த அரிசியையோ சீனியையோ அடுத்த நூற்றாண்டு எறும்பொன்று கண்டெடுத்தாயினும் உண்டு பயன்பெறுமோ என்று யோசித்துக்கொண்டிருக்க அந்தக்கணம் அதற்குப் பயன்பட்டிருக்கக்கூடும் என்று எனக்குட் சொல்லப்பட்டது. இறப்பின் அருகில் வாழ்க்கையினை இன்னொரு முறை வாழக்கிடைப்பின், அடுத்த முறையேனும் அடுத்துக் கெடுதல் புரிவோர்க்கும்கூட கெடுதல் புரியாமற் கழித்திருக்க அவாப் பிறக்கும் என்பது வெளிக்கக்கிய கேணி நீருள்ளே நான் பிழிந்த கணஞானம். முதல்மிடறு தேநீர் இன்றையகலவை மோசம் செய்யவில்லை என்பது போலிருந்தது. அடுத்த இருமிடறுகளுக்குமிடையே எறும்பின் என்- அவமதிப்பு-காணாமை ஒரு தேர்ந்தெடுத்த காணாதிருக்கும் பாசாங்குச்செயலாக இருக்கமுடியாது என்று அழுத்த திருத்தமாக உறுதிபண்ணிக்கொண்டேன்.... சத்தியமாக, நான் நீருள் மூழ்குகையில், எவர் கத்தியதும் கேட்டிருக்கவில்லை.... சொல்லப்போனால், நான் நீரை மூக்காலும் வாயினாலும் உள்ளெடுத்துக் கொண்டிருந்ததுகூட எனக்குப் புரிந்திருக்கவில்லை. எறும்பிற்கு இப்போது தான் நீருள் ஆழ்ந்திறப்பது பற்றி ஒருவன் தன்னுள்ளே தனிச்சமர் நடத்திச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் என்று தெரிந்திருக்குமா? என் மனச்சலனமும் என் குறுகிப்போன அவமானம்போல் நிகழ்காலப்புலனிற்ற எறும்புக்குக் கேட்காது என்று உணர்ந்து அதைத் தட்டி நீருக்கு வெளியே எடுக்க மேசையிலே குவிந்திருந்த அரைக் கோளத் தேநீர் இக்ளூக் குமிழினை நோக்கித் திரும்பினேன்.
நீ
ண்

......
.........
நீர்க்கீலம்.....
.......... எறும்பு எப்போதோ எங்கேயோ போய்விட்டிருந்தது.
பின்னே கண்ட எறும்புகளில் அந்த எறும்பை நான் ஒருபோதும் கண்டிருக்கவில்லை.

'99 ஜூன் 10, வியாழன்.

0 பின்னுதை:

Post a Comment

<< Home